விநாயகப் பெருமானுடைய நாமத்தை (பிள்ளையார்) தம்பியாரான முருகப்பெருமான் பெற்றுக்கொண்டமையும் அதுவே ஆலயத்தின் பெயராக நிரந்தரமாகவே நிலைபெற்று விட்டமையும் ஒரு சாதாரண விடயமாக கருதி விட முடியாது. அதாவது வேலைக்கைப் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டமையானது ஓர் அற்புத நிகழ்வுடன் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஏதாவது அமானுஷ்யமான காரணத்துடன் தொடர்புடையதாகவோ கருதுவதற்கு இடமுண்டு என சமய ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றது.
இந்த ஆலயம் குறிப்பிட்ட ஒரு பரம்பரையினருக்கு சொந்தமானதாக இருக்கின்றது. இந்தப் பரம்பரையினரின் வழித்தோன்றலாக வருபவர்களே ஆலயத்தை பராமரித்து நிர்வாகித்து வருகின்றார்கள்.இந்தப் பரம்பரையினரின் முன்னோர் ஒருவரால்தான் சிறியதாக ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாற்று தகவல். கடந்த கால போர் சூழ்நிலைகலினாலும், அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வு போன்ற காரணங்களினாலும் ஆலய வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நூல்கள், எட்டு சுவடிகள் போன்ற பல ஆவணங்களை இழக்க வேண்டிய நிலைமைஏற்பட்டமையானது வருத்தத்திற்குரியது.
இந்த ஆலயத்தை பரிபாலித்து வரும் பரம்பரையினரின் முன்னோர்கள், அடியார்களின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் காலத்திற்கு காலம் புனருத்தரான வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆலய கட்டட பணிகளும், அதன் வடிவமைப்பும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தன.